தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் டெண்டர் மற்றும் மதுபான கொள்முதல் பணிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றச்சாட்டியிருந்தது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதியதாக ஒரு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, சென்னை, கரூர், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் சுமார் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சுமார் 3 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குதல், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், முன்னாள் முதுநிலை மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், மற்றும் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான ரத்தீஷ்ராஜ், சண்முகவேல், கார்த்திக் ஆகிய ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையின்படி, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் 5380 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 3240 மதுபான பார்கள் தொடர்பான டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இறுதி செய்யப்பட்ட 857 பார்களுக்கான டெண்டரில், விதிமுறைகள் மீறப்பட்டு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாதகமாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாகவும், ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான வரிசை எண்களைக் கொண்ட டி.டி.க்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள 857 பார்களில், 284 பார்கள் மூடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு, உரிமம் புதுப்பிக்கப்படாமலேயே தொடர்ந்து செயல்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மாதாந்திர டி.டி. செலுத்தாத பார்களை மூடிவிட்டு புதிய டெண்டர் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், டாஸ்மாக் அதிகாரிகள் பார் உரிமையாளர்களுடன் இணைந்து விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதன் காரணமாக, 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் கோவை வடக்கு மாவட்டத்தில் 17.27 கோடி, கோவை தெற்கு மாவட்டத்தில் 13.58 கோடி, நீலகிரி மாவட்டத்தில் 1.95 கோடி என அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் 45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையிலும் முறைகேடு நடந்துள்ளது. சன் டிரான்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ரவிச்சந்திரன், 16 கிடங்குகளுக்கான டெண்டரில் பங்கேற்று, தலா ரூ.50,000 மதிப்பிலான 16 டி.டி.க்களை சமர்ப்பித்துள்ளார். அவருக்கு ஒரு டெண்டர் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு டி.டி. மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, மீதமுள்ள 9 டி.டி.க்கள் பிற நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்க பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் டெண்டர் நடைமுறையில் முறைகேடு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 100 கோடி ரூபாயை போக்குவரத்து நிறுவனங்களுக்கு செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் தனது கணக்கிலிருந்து 25 லட்சம் ரூபாய் செலுத்தி 42 டி.டி.க்கள் எடுத்ததாகவும், அவை பார் டெண்டருக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் எந்தப் பார் டெண்டருக்கும் விண்ணப்பிக்கவில்லை என்றும், கார்த்திக் என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த டி.டி.க்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பார்கள் அனைத்தும் மூலனூர் கார்த்திக் மற்றும் அவருடன் தொடர்புடைய குழுவினரால் நடத்தப்பட்டதாகவும், தமிழகம் முழுவதும் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு பார் டெண்டர்களை ஒதுக்குமாறு டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசியல் பிரமுகர்கள் சிலர் பார் உரிமையாளர்களிடம் கட்சிப் பணம் என்ற பெயரில் பணம் வசூலித்ததாகவும், அதேபோன்று பார் உரிமையாளர்களிடமிருந்தும் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதாகவும், குறிப்பாக வெளிநாட்டு மதுபானங்களுக்கு 500 ரூபாய் வரையிலும், மற்ற மதுபானங்களுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் கூடுதலாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டதாகவும் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் சில குறிப்பிட்ட டிஸ்டில்லரி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து கோரிக்கை வராத நிலையிலும் குறிப்பிட்ட நிறுவனங்களின் மதுபானங்கள் வழங்கப்பட்டதாகவும், இது முறைகேடான நடவடிக்கை என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தமது FIR-ல் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர் மற்றும் ரதீஷ் ராஜ், சண்முகவேல் ஆகியோர் டாஸ்மாக் அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களில் தலையிட்டு, அதன்மூலம் முறைகேடான பலன்களைப் பெற்றுள்ளதாகவும், அப்போதைய டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஐஏஎஸ் அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
