சென்னை அனகாபுத்தூர் பாலாஜி நகர் பகுதியில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை விட தவெகவிற்கு அதிக வாக்குகள் அளித்ததால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் நாதமணி, அரசு தண்ணீர் தொட்டியின் குழாயை ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
பல்லாவரம் தொகுதியில் நடந்த தேர்தலில், அனகாபுத்தூர் பாலாஜி நகர் பகுதியில் தவெக 2154 வாக்குகளையும், திமுக கூட்டணி கட்சியான தேமுதிக 1387 வாக்குகளையும் பெற்றிருந்தது. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, அப்பகுதி மக்களிடம் நாதமணி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 'நாங்கள் உங்களுக்காக அனைத்து வசதிகளையும் செய்தும், எங்களை ஏமாற்றி குறைவாக வாக்களித்துவிட்டீர்கள்' என ஆவேசமாகப் பேசிய அவர், அதன் உச்சகட்டமாக தனது இருசக்கர வாகனத்தில் வந்து, மறைத்து வைத்திருந்த ஆக்ஸா பிளேடால் தண்ணீர் டேங்க் பைப்பை அறுத்து சேதப்படுத்தியுள்ளார்.
தற்போது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைக்குத் தண்ணீர் எடுக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குடிநீர் விநியோகத்தை முடக்கியது மட்டுமின்றி, பொதுச்சொத்தை ஒரு அரசு பிரமுகரே சேதப்படுத்தியிருப்பது ஜனநாயகத்திற்கே விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் துறையினரிடம் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர்.
அரசு வசதிகளைச் செய்து கொடுத்ததைக் காரணமாகக் கூறி, தேர்தல் தோல்வியின் விரக்தியில் பொதுமக்களின் அடிப்படை உரிமையான குடிநீரைத் தடுத்த நாதமணி மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.