டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்று உரையாற்றினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட உறுதிபூண்டுள்ளதாக விஜய் தெரிவித்தார்.
கூட்டத்தில் முதல்வர் விஜய், நீட் தேர்வுக்கு பதிலாக ப்ளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், எந்த நிபந்தனையும் இன்றி ரூ.3284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழ்நாடு, தனது உறுதித்தன்மையையும் தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் சமூக மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாக திகழ்வதாகவும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையாக கோவை மாவட்டத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார். 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதே தமிழ்நாட்டின் இலக்கு என்றும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் மையங்கள் அமைக்க ஒன்றிய அரசின் ஆதரவு தேவை என்றும் அவர் தெரிவித்தார். 'அனைவருக்கும் வீடு' திட்டத்திற்கு ஒன்றிய அரசின் நிதி உதவி கோரப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்புப் பிரிவுகள், அவசரகால நடவடிக்கை அமைப்புகள், CCTV வலைப்பின்னல்கள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்றும், தொழில்நுட்பம் சார்ந்த அதிரடி காவல் பணிகளுக்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கத் தூதரக நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 1,076 கி.மீ கடற்கரைப் பகுதியைத் தற்காக்க, 'காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045' திட்டத்திற்கு ஒன்றிய அரசின் ஆதரவு தேவை என்றும், குலசேகரபட்டினத்தில் அமையவுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை 'தேசிய விண்வெளி உற்பத்தி மையம்' ஆக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரை 6 வழிச்சாலையாக்குதல், NH-81 திருச்சி – கரூர் பகுதியை 6 வழிச்சாலையாக்குதல், NH-87 மாதவரம் – சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைத்தல், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைத்தல், ஒகேனக்கல் 3-ஆம் கட்டக் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி ஒன்றிய நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்தார்.