கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் முதல் அமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'என்னை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது' எனத் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக சிலர் தன்னை குறிவைத்து செயல்படுவதாகவும், அதன் மூலம் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுத்த நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறாது என்றும், கூட்டணி தொடர்ந்து பலமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முதல் அமைச்சரின் செயல்பாடுகளைப் பாராட்டிய திருமாவளவன், கூட்டணி தர்மத்தை அவர் சிறப்பாக கடைப்பிடிப்பதாகவும், அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதாகவும் கூறினார்.