கோவை மாநகரம் முழுவதும் குற்றச் செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரு புதிய மற்றும் நவீனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. "நிழல் (Nizhal) – பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன்றிணைவோம்" என்ற பெயரில் இந்த QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் சுமார் 40.11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 2,272-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் வருகை காரணமாக, சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது காவல் துறைக்கு ஒரு முக்கிய சவாலாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில், பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவசர காலங்களில் காவல் துறையின் சேவையை விரைவாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் இந்த புதுமையான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இந்த "நிழல்" திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூடுதல் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலால் அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பொதுமக்கள் தங்கள் கைப்பேசி கேமரா மூலம், மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து, காவல் துறையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம், எந்தவொரு அசம்பாவிதச் சம்பவங்கள் குறித்தும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம். மேலும், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்பது இந்தத் திட்டத்தின் மிக முக்கியச் சிறப்பம்சமாகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற பல்வேறு குற்றங்கள் குறித்து பொதுமக்கள் இந்த QR குறியீடுகள் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்துத் தகவல்களும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாஸ்டர் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். இங்குப் பயிற்சி பெற்ற சிறப்பு காவல் அதிகாரிகள், QR கோடு மூலம் வரும் தகவல்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி, துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் என மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த QR குறியீடுகள் படிப்படியாக நிறுவப்பட உள்ளன. இதன் மூலம், கோவை மாநகரம் இனி குற்றவாளிகள் தப்பிச் செல்ல முடியாத ஒரு பாதுகாப்பான பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
