மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்றபோது, கல்லூரி முதல்வர் அறைக்கு வெளியே தவெக கட்சி கொடி வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது கல்வித்துறை அறிவுறுத்தல்களுக்கு எதிரானது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னாள் கல்லூரி மாணவர்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாநிலக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடுதல், ரத்ததான முகாம், உடல் உறுப்பு தான உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக கல்லூரி முதல்வர் அறையில் இருந்த புகைப்படங்கள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார்.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், கட்சி ரீதியான செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும் கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. சட்டப்படி கல்வி நிறுவன வளாகங்களில் அரசியல் கட்சி கொடிகள் ஏற்ற அனுமதி இல்லை. இந்நிலையில், மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக கொடி வைக்கப்பட்டிருந்தது கல்வித்துறை விதிமுறைகளை மீறிய செயல் என விவாதப் பொருளகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் விஸ்வநாதன் சினிமா பாடலுக்கு நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியில் தவெக கொடி இடம்பெற்றது மீண்டும் அவருக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.