இந்தியாவில் மத, கலாச்சார ரீதியாக மக்களிடையே உண்ணாநோன்பு என்பது ஆழமாக வேரூன்றியுள்ளது. தங்கள் நம்பிக்கைகள் நிறைவேற தெய்வங்களுக்காக மக்கள் நோன்பிருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், ஒரு கோரிக்கைக்காக நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிக்க அரசு ஏன் முயற்சிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மகாத்மா காந்தி நடத்திய போராட்டங்களில் உண்ணாவிரதம் ஒரு வலிமையான அறவழிப் போராட்டமாக விளங்கியது. இது ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முன்வைக்கும் தார்மீக அழுத்தமாகும். நிராயுதபாணியான போராட்டக்காரர்களிடம் அரசு சமாதானம் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை.
சமீபத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை ஜூலை 18 அன்று டெல்லி போலீஸார், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஜனநாயகத்தில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதில் உண்ணாவிரதம் முதன்மையானது என நீதிமன்றங்கள் பலமுறை அங்கீகரித்துள்ளன. இது ஜனநாயக வழியில் போராடுவதற்கான சட்டப்பூர்வமான வழிமுறையாகும். ஆனாலும், போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்படும் நிலையும் உள்ளது.
உண்ணாவிரதம் இருக்க சட்டத்தில் இடமிருக்கிறதா, போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு வலுக்கட்டாயமாக உணவு வழங்க முடியுமா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். சோனம் வாங்சுக் விவகாரத்தில், அவரது உடல்நலம் மோசமடைந்து வருவதால் உடனடியாக மருத்துவர்கள் தலையிட வேண்டும், தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக உணவு அளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜாஸ் கரியா அமர்வு, 'வான்சுக் உடல்நலத்தை அரசு மருத்துவர்கள் மூலம் தினசரி கண்காணிக்க வேண்டும், தேவைப்படும் பட்சத்தில் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் உயிரும் மிகவும் உயர்ந்தது' என உத்தரவிட்டது. எனினும், சோனம் வாங்சுக்கிற்கு வலுக்கட்டாயமாக உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவில்லை.
இந்தியச் சட்டங்களில் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதற்குத் தடை ஏதும் இல்லை. நமது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(அ) பேச்சுரிமை மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையும், பிரிவு 19(1)(பி) அமைதியாக மக்கள் கூடுவதற்கான உரிமையையும் வழங்குகிறது. உண்ணாவிரதப் போராட்டம் என்பது அறவழியில் அமைதியாக நடத்தும் அரசியல்ரீதியான போராட்டமாகும். இது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது.
ஜனநாயகத்தில் ஒருவர் தனது எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவிக்க உண்ணாவிரதப் போராட்டம் ஒரு பாதுகாக்கப்பட்ட வழிமுறை என உச்ச நீதிமன்றம் பலமுறை கருத்துத் தெரிவித்துள்ளது. அதேசமயம், பொது அமைதி, பாதுகாப்பு போன்ற நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இது நடக்க வேண்டும். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிந்ததைக்கூட நீதிமன்றம் ரத்து செய்த சம்பவங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், உண்ணாவிரதம் என்பது தற்கொலை முயற்சி அல்ல; அது அரசியலமைப்புச் சட்ட ரீதியாக ஏற்கப்பட்ட ஒரு போராட்ட வடிவம்.
ராம்லீலா மைதானம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், 'காந்தியடிகள் கடைபிடித்த சத்யாகிரகப் போராட்டத்தின் ஒரு வடிவமாகவே உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறது. ஆதலால், இதை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூற முடியாது' என்று தீர்ப்பளித்தது.
உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்திருந்தாலும், ஒருவரின் உயிரைக் காப்பது அரசாங்கத்தின் முதன்மையான கடமை. 2024-ல் பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜகத் சிங் தலேவால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, உச்ச நீதிமன்றம் 'உண்ணாவிரதம் இருக்கும் நபரின் உயிரைக் காப்பது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பு. அவரின் போராட்டத்தைக் கைவிட வற்புறுத்தாமல், அவருக்கு மருத்துவ உதவிகளை அரசு வழங்கலாம்' என உத்தரவிட்டது.
முன்னர் நடந்த பல சம்பவங்களில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் விரோதப் போக்கைக் கடைபிடிக்காமல், அவர்களுடன் சமரசப் பேச்சு நடத்த வேண்டும் என மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஐரோம் ஷர்மிளா, அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அவர்களுக்குக் கட்டாய உணவு அளிப்பதற்குப் பதிலாக உடல்நலத்தைக் கண்காணிக்க அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் 1949 நவம்பர் 25 அன்று வரைவு அரசியலமைப்புச் சட்டத்தை தாக்கல் செய்து பேசும்போது, 'இந்திய ஜனநாயகத்திற்கு சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியலமைப்புக்கு எதிரான வழிகளைக் கடைபிடித்தல், தனிநபரை வழிபடும் போக்கு' ஆகிய மூன்று ஆபத்துகள் ஏற்படலாம் என்றார். இதில், 'சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வன்முறை மற்றும் கட்டாயப்படுத்தும் வழிமுறைகளை, அதாவது சட்டமறுப்பு, ஒத்துழையாமை, தீவிர சத்தியாகிரகம், உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியில் நியாயம் இருந்தது, ஆனால் புதிய ஜனநாயகம் மலர்ந்த பின்பும் இவற்றைத் தொடர்வது 'அராஜகத்தின் இலக்கணம்'. இவற்றை எவ்வளவு விரைவாகக் கைவிடுகிறோமோ அது தேசத்துக்கு நல்லது' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
