வடமாநிலமான உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை, இடி மின்னல் தாக்கியதில் மாநிலம் முழுவதும் இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த கனமழை மற்றும் புயல் காரணமாக, பல இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைகள், காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, கனமழையால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறும், அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.