சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி! சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே இயக்கப்படும் எம்ஆர்டிஎஸ் (MRTS) பறக்கும் ரயில் திட்டத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் ரயில் வாரியத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் ஒரு மாதத்திற்குள் ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள எம்ஆர்டிஎஸ் ரயில் சேவையை, மெட்ரோ ரயில் சேவையின் தரத்திற்கு உயர்த்தி மேம்படுத்த, மெட்ரோ ரயில் நிர்வாகமே இதை ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தெற்கு ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் இடையே தயார் செய்யப்பட்டு, ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், ரூபாய் 4,500 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொள்ளும். எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைத்தல், சிக்னல் அமைப்புகளை மேம்படுத்துதல், எம்ஆர்டிஎஸ் தண்டவாளங்களுக்கு ஏற்றவாறு மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரித்தல், ரயில் நிலையங்களில் மின்தூக்கிகள் மற்றும் நகரும் மின்படிக்கட்டுகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எம்ஆர்டிஎஸ் வழித்தடத்தை மெட்ரோ ரயில் சேவைக்கு நிகராக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு, 21 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு, மெட்ரோ ரயில் வழித்தடமாக மாற்றப்படும். சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் உள்ள 18 ரயில் நிலையங்கள் (மொத்தம் 19.47 கி.மீ.) மற்றும் வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் உள்ள 3 ரயில் நிலையங்கள் (மொத்தம் 5 கி.மீ.) இந்த திட்டத்தில் இணைக்கப்படும். அதுவரை, தற்போதுள்ள நடைமுறைகளின்படி, பழைய கட்டண விகிதத்திலேயே எம்ஆர்டிஎஸ் ரயில் சேவைகள் தொடரும் என்றும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.