காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மாடம்பாக்கம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரண்டு பைக்குகளில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர், மாடம்பாக்கம் அன்னை சத்தியா நகரைச் சேர்ந்த செல்வகுமார் (30). இவர் தி.நகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல நேற்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வேலைக்குக் கிளம்பியுள்ளார். காலை சுமார் 7 மணியளவில், கூடுவாஞ்சேரி சாலையில் தனது பைக்கில் மாடம்பாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மாடம்பாக்கம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த நவீன் (25) என்ற தனியார் நிறுவன ஊழியர், இரவுப் பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பி வந்துள்ளார். மாடம்பாக்கம் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக இருவரும் ஓட்டி வந்த பைக்குகள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இருவரும் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.