நீலகிரி மாவட்டம், 55% வனப்பகுதிகளைக் கொண்டிருப்பதால், இங்கு பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கடமான், சிறுத்தை, காட்டு யானை போன்ற வனவிலங்குகள் இங்கு காணப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி, வனப்பகுதிகள் நிறைந்த சாலையைக் கொண்டுள்ளது. இங்கு அடிக்கடி வனவிலங்குகள் சாலையைக் கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு மசினகுடி அருகே சீகூர் பகுதியில் வனப்பகுதி வழியாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒரு புலி சாலையைக் கடந்து சென்றது. அடர்ந்த வனப்பகுதி நிறைந்த சாலையில் இரவு நேரத்தில் புலி நடமாட்டம் இருந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இரவில் வனவிலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். புலி சாலையைக் கடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.