சென்னை: எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அங்கு பணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் 104 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் மிக முக்கிய மற்றும் பழமையான மருத்துவமனைகளில் ஒன்றான எழும்பூர் அரசு தாய்-சேய் மருத்துவமனையில், முதலமைச்சர் விஜய் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மருத்துவமனையின் வார்டுகள், அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து முதலமைச்சர் விரிவாக கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார். நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ வளாகம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
மருத்துவமனையில் குழந்தைகளைப் பார்ப்பதற்கோ அல்லது சிகிச்சை அளிப்பதற்கோ பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், 'அத்தகைய புகார்கள் இருப்பதை மறுக்க முடியாது. அதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். யார் பணம் கேட்டாலும் அவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் சிலர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மறுக்க முடியாது' என்று கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் பொது மக்களிடம் எந்த விதத்திலும் பணம் வசூலிக்கக் கூடாது என்றும், மருத்துவமனை ஊழியர்கள் யாரேனும் பணம் கேட்டாலோ அல்லது வற்புறுத்தினாலோ பொதுமக்கள் உடனடியாக 104 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தினார். அவ்வாறு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
காப்பீட்டு அட்டை இல்லாத காரணத்தால் எந்த நோயாளிக்கும் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்றும், அரசு மருத்துவ சேவை என்பது மக்களின் அடிப்படை உரிமை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், மருத்துவமனையில் கூடுதல் கழிவறைகள், கூடுதல் வார்டுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், சுகாதாரமான உணவு மற்றும் தேநீர் வழங்கும் வசதி அவசியம் இருப்பதாகவும், இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திடீர் ஆய்வு மற்றும் அமைச்சர் அருண்ராஜ் அளித்த தகவல்கள், அரசு மருத்துவமனைகளின் சேவையை மேம்படுத்துவதற்கான அரசின் தீவிர முயற்சியை காட்டுகிறது.
