தமிழகத்தில் பொதுவான ஜாதி சான்று, வருவாய் சான்று, இருப்பிட சான்று போன்ற குறிப்பிட்ட சில வகை சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்த வருவாய் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், சான்றிதழ்களுக்காக இனி மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு பல்வேறு வகையான சான்றிதழ்கள் அவசியமாகின்றன. குறிப்பாக, வருவாய் சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று, முதல் திருமணம் சான்று, முதல் பட்டதாரி சான்று, வாரிசு சான்று போன்றவற்றுக்கு மக்கள் வருவாய் துறையை நாடுகின்றனர். இந்த சான்றிதழ்கள் விரைவாக கிடைத்தால் மட்டுமே, அவர்கள் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.
முன்னதாக, இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இ-சேவை மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்படும். அவர் ஆய்வு செய்து வருவாய் ஆய்வாளருக்கும், அதன்பின் தலைமையிடத்து துணை தாசில்தார் அல்லது தாசில்தாருக்கும் அனுப்பப்படும். இதில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என மூன்று கட்ட ஆய்வுகள் நடைபெற்று வந்தன. இந்த மூன்றடுக்கு ஆய்வு நடைமுறை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய சூழலுக்கு ஏற்ப வகுக்கப்பட்டது.
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போதைய நடைமுறைகள் மற்றும் சூழல்களின் அடிப்படையில், சான்றிதழ்கள் வழங்குவதை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் அடிப்படையில், எஸ்.சி., – எஸ்.டி., அல்லாத பிற ஜாதி சான்றிதழ்கள், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் திருமணம் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் போன்ற சில வகை சான்றிதழ்களில், வருவாய் ஆய்வாளரின் தலையீட்டைத் தவிர்க்கலாம்' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்த பிறகு, விண்ணப்பம் நேரடியாக தலைமையிடத்து துணை தாசில்தாருக்கு சென்றால், உடனடியாக சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதற்கான வழிமுறைகளை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். தானியங்கி பட்டா மாறுதல் பணி எளிமைப்படுத்தப்பட்டது போலவே, இந்த பணிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. வருவாய் ஆய்வாளரின் ஆய்வு எந்தெந்த சான்றிதழ்களுக்குத் தேவை என்பதை நாங்கள் வரையறை செய்து வருகிறோம்' என்றும் கூறினார்.
இந்த புதிய மாற்றங்கள் மூலம், வருவாய் ஆய்வாளர்களின் பணிச்சுமை குறைவதுடன், மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சான்றிதழ்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சான்றிதழ் பெறுவதில் உள்ள காலதாமதத்தை வெகுவாகக் குறைக்கும் என நம்பப்படுகிறது.
வருவாய் துறையின் இந்த முயற்சி, மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாக அமைந்துள்ளது. நிர்வாகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இந்த மாற்றம் செயல்படுத்தப்படும்போது, சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள் மேலும் எளிமையாகும்.
