மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய கடந்த திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எனவே புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து அரசு தரப்பில் கூறப்படும் காரணங்களை ஏற்க முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மொத்த மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்ந்துள்ள நிலையில், 84 சதவீத மின்சார தேவைகளுக்கு மத்திய அரசு மற்றும் தனியார் மின்நிலையங்களையே தமிழகம் சார்ந்துள்ளது.
சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் செலவை விட பல மடங்கு அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதுவே தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டம் அடைவதற்கும், அதன் கடன் ரூ.2.50 லட்சம் கோடியை தாண்டியதற்கும் முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, 5,700 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் இருந்தன. திமுக அரசு நினைத்திருந்தால் அனைத்து திட்டப் பணிகளையும் நிறைவேற்றி உற்பத்தியை தொடங்கியிருக்க முடியும். அதிமுக ஆட்சியில் 90 சதவீத பணிகள் முடிந்திருந்த வடசென்னை 3-வது அனல் மின் நிலையத்தில் (800 மெகாவாட்) மட்டுமே கடந்த பிப்ரவரி – மார்ச் மாதத்தில் வணிகரீதியான மின் உற்பத்தி தொடங்கியது. மீதமுள்ள 4,900 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையப் பணிகள் இதுவரை முடியவில்லை.
தமிழகத்தில் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும். கடந்த ஆட்சியில் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் அனல் மின் திட்டங்களின் நிலை, அவை எப்போது உற்பத்தியை தொடங்கும், புதிதாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன, கார்பன் சமநிலையை அடைய அனல் மின் உற்பத்தியை எப்போது முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
