மும்பையில் விநாயகர் சிலைக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியின்போது, ராட்சத விநாயகர் சிலை சரிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் 2 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஜெய் அம்பெ சவுக் பகுதியில், சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கபூதர்கானா அருகே பலராம் மெர்ச்சன்ட் சாலையில், மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ராட்சத விநாயகர் சிலை திடீரென சரிந்து விழுந்தது. சிலையை காண ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த விபத்தில் சங்கத் நெவ்ஷே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வைபவ் கெனந்த் (38), பவன் சௌராசியா (25), லாவண்யா கானர் (5), திவ்யா கானர் (7) மற்றும் குணால் காஷித் (26) ஆகிய ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும், தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், ஆம்புலன்ஸ் சேவையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகள் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள கணேஷோத்சவ விழாவிற்கு முன்னதாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற மும்பையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அதிகாரிகள், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
