திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அம்மா உணவகங்களின் தரம் மற்றும் விற்பனை படிப்படியாக உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதலே, அம்மா உணவகங்களை தரம் உயர்த்துவதற்கும், மக்களுக்கு தரமான உணவு வழங்குவதற்கும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, 2022 ஆம் ஆண்டு முதல் அம்மா உணவகங்களின் தரமும், விற்பனையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, 2025-26 நிதியாண்டில், 7.06 கோடி ரூபாய் செலவில் அம்மா உணவகங்களுக்கான புதிய இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. மேலும், அம்மா உணவகங்களின் கட்டிடங்களை புனரமைப்பதற்காக 2024-25 நிதியாண்டில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் புனரமைப்பு பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.'
மேயர் பிரியா மேலும் கூறுகையில், 'இந்த மேம்பாடுகளின் எதிரொலியாக, அம்மா உணவகங்களால் பயனடையும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 2026 ஜனவரி மாதத்தில் மட்டும் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் சராசரி நிலையை அம்மா உணவகங்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. சர்வதேச போர் பதற்ற சூழல் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஏப்ரல் மாதம் மட்டும் உணவு தயாரிப்பு அளவு மற்றும் விற்பனை சற்று சரிந்தது. இருப்பினும், மாநகராட்சி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கைகளால், மே மற்றும் ஜூன் மாதங்களில் விற்பனை மீண்டும் முந்தைய நிலையை (மாதத்திற்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை) எட்டியது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அம்மா உணவகங்களின் விற்பனை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சீரிய முயற்சிகளே காரணம் என்றும், நடிகர் விஜய் அல்ல என்றும் மேயர் பிரியா தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
