தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காலை முக்கிய அறிவிப்புகளுடன் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
சட்டமன்றத்தில் கொறடாவை நியமிப்பதிலும் இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போதைய தமிழக அரசுக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, 22 சட்டமன்ற உறுப்பினர்களுடன் அரசுக்கு எதிராக வாக்களித்தது. இந்தச் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் தற்போதைய நிலவரம், சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு, பொதுக்குழு கூட்ட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்புகள் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.