தஞ்சையில் நடைபெற்ற பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்விகளைக் கண்டு திமுக ஒருபோதும் சிதறாது என்றும், தொண்டர்கள் சோர்ந்து போகத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெற்றி தோல்விகளை சமமாக கருதி தொடர்ந்து பாடுபடும் இயல்புடையது திமுக கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் இன்றளவும் தற்போதைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், திமுகவின் சாதனைகளை யாராலும் மாற்ற முடியாது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். திமுகவின் திட்டங்கள் தொடரும் வரை, திமுகவே ஆட்சி செய்வதாகக் கருதப்படும் என்றும், இந்தத் திட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திமுக தீவிரமாகத் தொடங்கியுள்ளதாகவும், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சிக்குள் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் கூறினார். எந்தப் பணியும் செய்யாமல் ஒரு கட்சி வெற்றி பெற்றதாகவும், திமுக அனைத்துப் பணிகளையும் செய்தும் தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம், குழந்தைகளைப் பரப்புரைக்கு பயன்படுத்தி ஒரு கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
'திமுகவின் கதை முடிந்துவிட்டது' என்று எதிரிகள் நினைப்பதாகவும், ஆனால் திமுக தோல்விகளிலிருந்து பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டெழுந்த வரலாறு உண்டு என்றும் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.