சென்னை: அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரபாகர் உறுதிப்படுத்தியுள்ளார். மதுராந்தகம் (தனி) தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் (தனி) தொகுதி எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
இது குறித்து பேரவைத் தலைவர் பிரபாகர் கூறுகையில், 'ஒரு உறுப்பினர் பதவி விலகும்போது அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. உறுப்பினர் தானாக முன்வந்து ராஜினாமா கடிதம் அளிக்கும்போது, அது முறையாக உள்ளதா என்பதை சரிபார்ப்பதே எனது பணி. பேரவை விதி 21-ன்படி, பதவி விலக விரும்பும் உறுப்பினர் தனது எண்ணத்தை கைப்பட எழுதி தெரிவிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்துள்ளதால், ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். மேலும், பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்து விதிகளின்படி முடிவெடுப்பதாகவும் அவர் கூறினார்.
ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மூன்று எம்எல்ஏக்களும் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு உடனடியாக தவெக உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இதற்கிடையே, சி.வி.சண்முகம் தரப்பைச் சேர்ந்த ஆற்காடு எம்எல்ஏ எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏக்கள், மன்னிப்பு கடிதம் அளித்து பழனிசாமி அணியில் இணைந்தனர். இதன் மூலம், பழனிசாமி அணியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 27 ஆகவும், சி.வி.சண்முகம் அணியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆகவும் குறைந்துள்ளது.
முன்னதாக, முதல்வர் விஜய் வெற்றி பெற்று ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ள நிலையில், தற்போது இந்த மூன்று எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாக பிரிந்திருந்தனர்.