தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவு துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையும் 45 முதல் 60 நாட்களுக்குள் அரசால் செலுத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை மனதில் கொண்டும், தற்போதைய தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்களை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஒரு முக்கிய அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்காக அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.