தமிழகத்தில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை திசை திருப்பவே அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
18 ஆம் தேதி சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், அவசர அவசரமாக வெள்ளை அறிக்கை வெளியிட்டதன் நோக்கம் என்ன என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்பவா அல்லது மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த மக்களுக்கு திமுக அரசின் மீதுள்ள வெறுப்பை திசை திருப்பவா என்றும் அவர் வினவியுள்ளார்.
மேலும், இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை முதல்வர் மறைமுகமாக தெரிவிக்கிறாரா என்றும் ஜெயக்குமார் சந்தேகம் எழுப்பியுள்ளார். திமுக அரசால் உருவாக்கப்பட்ட நிதிச்சுமையை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், அதை சரிசெய்ய தங்களிடம் உள்ள திட்டங்கள் என்ன என்றும், கடன் வாங்குவதை தொடர்ந்தபடியே நிதி நிலைத்தன்மையை உறுதி செய்ய என்ன திட்டம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து திமுகவின் தவறுகளுக்குள் ஒளிந்துகொள்ளாமல் மக்களுக்கான அரசியலை செய்ய வேண்டும் என்றும், 'ஆச்சரியக்குறி' என்று சொல்லிக்கொள்ளும் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் ஜெயக்குமார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.