முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று, அண்ணாமலை தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, ஏற்கனவே 'we the leaders' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் இதுவரை சுமார் 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
2029 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில், இந்த இயக்கத்தை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்தபோது மத அடையாளம் காரணமாக தயக்கம் காட்டிய நடுத்தர வர்க்க விவசாயிகள், வணிகர்கள் மற்றும் இளைஞர்கள், தற்போது அண்ணாமலையின் தனி கட்சியை வரவேற்க அதிக வாய்ப்புள்ளது.
பாரம்பரியமாக அதிமுக மற்றும் திமுக இடையே மாறி மாறி வாக்களித்து வரும் கொங்கு மற்றும் இடைநிலை ஓபிசி சமூகங்களின் வாக்குகளை தன் பக்கம் ஈர்ப்பதே அண்ணாமலையின் முக்கிய இலக்காக உள்ளது. மேலும், படித்த நடுத்தர வர்க்கம், நகர்ப்புற இளைஞர்கள், ஊழலுக்கு எதிரான அரசியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகத்தில் நம்பிக்கை கொண்டவர்களையும் குறிவைத்து அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம், தமிழக அரசியல் களத்தில் இனி மும்முனைப் போட்டி உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது. ஒருபுறம் தவெகவின் தலித்-மைனாரிட்டி கோட்டை, மறுபுறம் ஓபிசி-எம்பிசி வாக்குகளுக்கான திமுக, அதிமுக மற்றும் அண்ணாமலை இடையேயான கடுமையான போராட்டம் ஆகியவை எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.