நடிகர் விஜய்யை முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 'ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்' என்று குறிப்பிட்டு, கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யின் அலட்சியமே காரணம் என அவர் குற்றம் சாட்டினார். விஜய்யின் பயந்த முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னமாக இருக்கும் என்றும் சிவசங்கர் சாடினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர், "இன்று கரூருக்கு சொன்ன நேரத்தில் சென்ற நீங்கள், அன்றே அதே நேரத்திற்கு சென்றிருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்காது. கடந்த ஆட்சியின் மீது நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உங்களுக்கே பொருந்தும். நீங்கள் படித்த ஸ்கிரிப்டை நன்றாக படித்திருந்தால் இது உங்களுக்கு புரிந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "யோகி பாபுவை பார்க்க கூட்டம் கூடி, அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அதற்கும் அரசு சார்பாக ஏதாவது செய்வாரா? இதற்கும் பணி ஆணை கொடுப்பாரா? எந்த ஒரு அரசியல் கட்சியும், தன்னுடைய அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்பமாட்டார்கள். அன்று எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் பெருந்தன்மையாக சொன்னார்கள். காரணம், அவர் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். அவரையும், உங்களையும் எந்த ஒரு விதத்திலும் ஒப்பிட முடியாது.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விமான நிலையத்தில் ஒரு வேக நடை போட்டாரே… அந்த முதுகுதான் கரூர் மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக இருக்கும். கரூர் உள்ளே செல்லும்போது உங்களை காவல்துறை எச்சரித்தது. இதனை விசாரணையில் சிபிஐயிடமும் காவல்துறை சொல்லியிருக்கிறது. ஆனால் எங்கள் திரைப்பட Unit-கள், கேமராக்களுடன் அங்கே காத்திருக்கிறது என்று நீங்கள் தான் உள்ளே சென்றீர்கள். அதனால் தான் 41 பேர் பலியான துயரம் நிகழ்ந்தது என்பது பட்டவர்த்தமான உண்மை. ஆனால் அதனை மறைக்க இன்று காவல்துறை மீது பழியை போடுகிறீர்கள்" என்று குற்றம் சாட்டினார்.
"உங்கள் ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆகியும் கரூருக்கு ஏன் முன்பே செல்லவில்லை? 2026 பிப் 9 அன்று, YS சுனில் ரெட்டியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டீர்கள். 2026 மார்ச் 5 அன்று, திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டீர்கள். 2025 டிச 27 அன்று, மலேசியாவில் நடைபெற்ற உங்களின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதோடு, மிகுந்த உற்சாகத்துடன் நடனமும் ஆடினீர்கள். உங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினீர்கள். இதையெல்லாம் செய்துவிட்டு உங்களுக்கு மனதில் இருந்த காயத்தையும் வலியையும் கரூர் வந்துதான் ஆத்துகிறேன் என்று ரொம்ப டீ ஆத்துகிறீர்கள்" என்று சிவசங்கர் தனது விமர்சனத்தை முடித்தார்.
