அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில உறுப்பினர்கள் திடீரென ராஜினாமா செய்து, உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பது தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் கோஷ்டி மோதல்களே இந்த ராஜினாமாக்களுக்குக் காரணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்தது அவர்களின் விருப்பம் என்றாலும், எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நடந்ததாகக் கருத முடியாது. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புவதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள அவர்களை, உடனடியாக தவெகவில் சேர்த்துக்கொள்வது, தவெக இதை ஊக்குவிப்பதாகவே கருதப்படும். எனவே, இந்த நிலை ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு சுட்டிக்காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.