தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், ஆளும் அரசின் மெத்தனப் போக்கையும், தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகளின் அராஜகத்தையும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாகச் சீர்கேடு மற்றும் காவல்துறையின் மெத்தனப் போக்கால் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு உதாரணமாக, தூத்துக்குடி அருகே வேன் ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராடியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கட்சித் தொண்டர்களின் அராஜகம் ஒருபுறம் இருக்க, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கும், சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை அளித்த சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், குறிப்பாக சேலம் சம்பவத்தில் மின்வாரிய ஊழியர் சீரங்கன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவிட்டதாகக் கூறியுள்ள நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி கொலை வழக்கில் தொடர்புடைய தவெக நிர்வாகிகள் மீதும், கோவை மற்றும் சேலத்தில் சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த குற்றவாளிகள் மீதும் அரசியல் தலையீடு இன்றி காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவாக உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர ஆளும் அரசை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.