தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க. பெரும்பான்மை பலம் பெறாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு கரம் நீட்டியது. மேலும், எதிர்காலத்திலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய், ஏற்கனவே ஆட்சியில் பங்கு தருவதாக உறுதியளித்துள்ள நிலையில், காங்கிரஸையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகளும், ஒரு மேல்சபை எம்.பி. பதவியும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், 2 அமைச்சர் பதவிகள் மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளதால், அந்தப் பதவிகளை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், சத்தியமூர்த்தி பவனில் நேற்று சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏ.க்களையும் கிரீஷ் சோடங்கர், ராகுல் காந்தியைச் சந்திக்க இன்று டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
டெல்லியில், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பதா அல்லது வெளியில் இருந்து த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வேண்டும் என அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். எத்தனை அமைச்சர்கள் என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனது பலத்தை வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.