நாகப்பட்டினம்: சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்த ராஜேந்திர சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள், பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் தற்போது இந்தியா திரும்பியுள்ளன. இந்த அரிய வரலாற்றுப் பொக்கிஷங்கள், தமிழ் மன்னர்களின் கொடைத்திறன், சமய நல்லிணக்கம் மற்றும் நிர்வாகத் திறனை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில், கி.பி. 1005-ல், நாகப்பட்டினத்தில் கட்டப்பட்ட 'சூளாமணி வர்ம விகாரம்' என்ற புத்த விகாரத்திற்கு, 97 வேலி நிலத்தை ராஜராஜ சோழன் வாய்மொழியாக தானமாக வழங்கினார். ராஜராஜன் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன், இந்த தானத்தை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து செப்பேடுகளாக வெட்டினார். 30 கிலோ எடை கொண்ட இந்த 21 செப்பேடுகள், ஒரு வெண்கல வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. இதில் சோழ அரச முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. செப்பேடுகளில் 5 வடமொழியிலும், 16 தமிழிலும் உள்ளன. குலோத்துங்க சோழனால் உறுதி செய்யப்பட்ட 3 சிறிய ஏடுகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சைவ சமயத்தைச் சார்ந்த ராஜராஜ சோழன், ஒரு புத்த விகாரத்திற்கு ஊரையே தானம் வழங்கியது, அன்றைய தமிழ் மன்னர்களின் சமயப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் காட்டுகிறது. தமிழ் ஏடுகள், அன்றைய நிர்வாகச் சொல்லாடல், நில அளவை முறைகள் மற்றும் சட்டப்பூர்வ ஆவண மரபுகளைப் பதிவு செய்கின்றன. 11-ம் நூற்றாண்டின் சர்வதேச வர்த்தகம், பவுத்த-சைவ நல்லிணக்கம், சோழர்களின் நிர்வாகத் திறன் மற்றும் கடல் கடந்த ராஜதந்திர உறவுகளுக்கு இது ஒரு சான்றாக விளங்குகிறது. மேலும், சோழ அரசர்களின் பட்டியல், அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவர்கள் வென்ற நாடுகளின் குறிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
18-ம் நூற்றாண்டில் டச்சு ஆட்சியின் போது, ஃப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் நாகையிலிருந்து இந்த செப்பேடுகள் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. ஹமேக்கர் குடும்பத்தினர் வசம் இருந்து, 1862-ல் லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இவற்றை மீட்டு தமிழகத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று பல தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், நெதர்லாந்து அரசு தற்போது பிரதமர் மோடியிடம் இவற்றை நேரடியாக ஒப்படைத்துள்ளது. இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு நிரந்தரமாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்று கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் ஆர்.கோமகன் வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த செப்பேடுகளை நாகப்பட்டினத்தில் பாதுகாப்பாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், இவை மத்தியகால தென்னிந்தியாவின் பன்முகப் பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகளின் முக்கிய தடயங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.