மலைகளின் இளவரசியான கொடைக்கானல், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய சுற்றுலா தலமாகும்.
குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விடுமுறையை கழிக்க இங்கு லட்சக்கணக்கானோர் குவிவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி, குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளனர்.
இதனிடையே, கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.
சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், பேன்சி, பேட்டுனியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா, டேலியா மற்றும் பல வகை ரோஜாக்கள் என விதவிதமான மலர்கள் பூங்காவை அலங்கரித்துள்ளன. வண்ண மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.