தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மூவர் வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தன் சகோதரர் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தபோது, தி.நகர் சட்டமன்றத் தொகுதியில் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். மீண்டும் கனடா செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோது, அவரது கை விரலில் இருந்த மை அடையாளத்தைக் கண்ட குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்படாததால் வாக்களித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கே.கே.நகர் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர்.
இதேபோல், விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர், விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களித்தது தெரியவந்தது. இவர் மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்ப விமான நிலையம் வந்தபோது, அவரது கை விரலில் இருந்த மை அடையாளத்தைக் கண்டு அதிகாரிகள் விசாரித்தனர். இதையடுத்து, விருகம்பாக்கம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்தது அம்பலமாகியுள்ளது. இவர் விமான நிலையம் வந்தபோது கண்டறியப்பட்டு, கொடுங்கையூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள், வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் பெயர்கள் எப்படி இடம்பெற்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முடிவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தச் சூழலில், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.