சமீபத்திய தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 38 பேர் கொண்ட 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தொண்டர்களின் கருத்துக்களை நேரடியாக பதிவு செய்ய 'உடன்பிறப்பின் குரல்' என்ற புதிய இணையதளத்தையும் தொடங்கியுள்ளார்.
ஆனால், தோல்விக்கான காரணங்களைத் தேடும் முன், திமுக தலைமை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில், கட்சிக்குள் கருத்து சுதந்திரம் இருந்தது. யாராக இருந்தாலும் அவர்களைப் பேசவிட்டு, மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பார். தொண்டர்களின் கருத்துக்கள் நேரடியாக கட்சித் தலைமையை சென்றடைய வேண்டும் என்பதற்காக, மாவட்ட செயலாளர்களுக்கு போட்டியாக வளர்ந்தவர்களையும் அவர் பாதுகாத்தார். இது கட்சிக்குள் சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும், கட்சியை வளர்க்க உதவியது.
ஒரு காலத்தில், தேர்தல் கணிப்புகளை துல்லியமாக சொல்லக்கூடிய வல்லுநர்கள் திமுகவில் இருந்தனர். ஆனால், வணிக ரீதியான வியூகம் வகுக்கும் நிறுவனங்கள் கட்சிக்குள் நுழைந்து 'கட்டளைகளை' பிறப்பிக்க ஆரம்பித்த பிறகு, கட்சியின் ஆரோக்கியம் கெட்டுவிட்டது. நிர்வாகிகளும் 'எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்' என்ற பாணியில் சொகுசு வாழ்க்கைக்கு பழகியதால், கிழிந்து தொங்கும் கட்சி கொடிகளை மாற்றக்கூட ஆளில்லாமல் போனது. சாதாரண கரைவேட்டியை அடையாளமாகக்கொண்ட கருணாநிதியின் காலம் மாறி, வியூக வல்லுநர்கள் சொன்ன இடங்களில் சைக்கிள் ஓட்டுவது, டீ குடிப்பது, செல்ஃபி எடுப்பது என திமுகவின் இயல்பு மாறியது.
புகைப்படங்கள், வீடியோ ஷூட்களை விரும்பும் தலைமையை திருப்திப்படுத்த, மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களுக்கு தலா 300 ரூபாய் கொடுத்து போலியான கூட்டத்தை காட்டினார்கள். இதனால், உண்மை நிலவரம் தலைமையை சென்றடையவில்லை. குறைகளை சொல்ல நினைப்பவர்களை ஊக்குவிக்காமல், மாவட்ட செயலாளர்கள் சொல்வதை மட்டுமே நம்பும் சூழல் ஏற்பட்டது. உண்மையை சொல்பவர்கள் மீது 'உள்ளடி வேலை' முத்திரை குத்தப்பட்டது. அமைச்சராக வேண்டும் என நினைத்தவர்கள், தங்கள் மாவட்டத்தில் யாரும் உயர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். எதிர்க் கட்சியுடன் பேசி, தங்கள் தொகுதிகளில் 'சொத்தான' வேட்பாளர்களை நிறுத்தி, சொந்தக் கட்சிக்குள் இருக்கும் போட்டியாளர்களை வலுவானவர்களை நிறுத்தி வீழ்த்தவும் முயன்றனர். கட்சிக்கு உழைத்த பல பாரம்பரிய திமுக குடும்பங்கள் காணாமல் போயின.
தேர்தல் நேரத்தில், 'உடன்பிறப்பே வா' என்று நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டீர்கள். அப்போதும் மாவட்ட செயலாளர்களுக்கு சிலர் 'துப்பு' கொடுத்ததால், உண்மையை சொல்ல வந்தவர்கள் உங்களிடம் உண்மை சொல்லாமல் திரும்பினர். மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தாராளமாக செலவு செய்தீர்கள். அதை திமுக நிர்வாகிகள் 'எங்க பணம் தானே' என்று சொல்லி பதுக்கிக் கொண்டார்கள். தேர்தல் தோல்விக்கான காரணங்களைத் தேடும் முன், கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைத்துவிட்டு, 'நம்மால் ஜெயித்துவிட்டு இப்படி போய்விட்டோமே…' என்று வேதனையில் இருக்கும் திமுகவினரை முதலில் அழைத்து ஆறுதல் படுத்துங்கள். அவர்கள் நீங்கள் சொன்னதால் உழைத்துவிட்டு, 'கொளத்தூர் வேதனைக்கு' நிகரான வலியில் உள்ளனர். எனவே, வேர்ப்பூச்சிக்கு வைத்தியம் பார்க்காமல் மேலோட்டமாக மகசூலுக்கு மருந்தடிப்பது நீடித்த பலனைத் தராது என்பதை புரிந்துகொண்டு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அப்டேட் ஆக வேண்டும்.