சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர் யார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசில் எந்தவித குதிரை பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு 'நிபந்தனை இல்லாத ஆதரவு' என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்கள்ளோ, அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் குதிரை பேரங்கள் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள்.
மேலும், 'முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?' என்பதையும் மக்களுக்குத் தெரியப்படுத்துவதோடு, அதற்குப் பின் எந்தவிதமான குதிரை பேரமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 13-ம் தேதி தமிழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்.எல்.ஏ., "தற்போதைய அரசு மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில், முதல்வரின் ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசு இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணத்தை வைக்கிறது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று பேசியிருந்தார். அன்றைய தினமே ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை அரசு ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பெரும்பான்மைக்காக அரசியல் கட்சிகளை நாடிக்கொண்டிருந்தபோது, அவரது வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர் யார் என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.