பிரபல டப்பிங் கலைஞரான ரவீணா ரவி, நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல கதாநாயகிகளுக்கு தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘ராக்கி’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தேவன் ஜெயக்குமார் இயக்கிய ‘வாலாட்டி’ என்ற மலையாளப் படத்திற்கு டப்பிங் பேசியிருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலை 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில், ரவீணா ரவி மற்றும் தேவன் ஜெயக்குமாரின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அவர்களது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகும் ரவீணா தொடர்ந்து நடிப்பு மற்றும் டப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவீணா ரவியின் தாயார் ஸ்ரீஜா ரவியும் 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அத்துடன் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.