கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கதேச எல்லையில் ஊடுருவலைத் தடுப்பதற்காக வேலி அமைக்கத் தேவையான நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) வழங்க ஒப்புதல் அளித்தார்.
பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக கடந்த 9-ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. அவரோடு பதவியேற்ற ஐந்து அமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். வங்கதேச ஊடுருவல் பிரச்சனையை மையப்படுத்தியே பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதன் காரணமாக, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு 45 நாட்களுக்குள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன், மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை உடனடியாகத் தொடங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, எல்லைப்புற மாவட்டங்களில் ஊடுருவல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இதன் காரணமாக, எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலத்தை 45 நாட்களுக்குள் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் அரசு நிறுத்தி வைத்திருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கும் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க 5 ஆண்டு வயது வரம்பு தளர்வு அளிப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கும் தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று கூறினார்.