மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளரான சந்திரநாத் ரத் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.
பிஹார் மாநிலம் பக்சர் பகுதியில் மயங்க் ராஜ் மிஸ்ரா, விக்கி மௌரியா ஆகிய இருவரும், உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் ராஜ் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டனர். கைதான ராஜ் சிங் மீது ஏற்கெனவே 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் விமானப் படை வீரரும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளருமான சந்திரநாத் ரத், கடந்த மே 6-ஆம் தேதி இரவு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மத்தியம்கிராம் பகுதியில் மர்ம நபர்களால் வழிமறித்துச் சுடப்பட்டார். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் துரத்தி வரப்பட்ட அவரது காரை வழிமறித்த அந்தக் கும்பல், அவர் மீது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்திரநாத் ரத்தின் காரை ஓட்டி வந்த புத்ததேவ் பேரா, மூன்று குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பாஜக வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் இந்தக் கொலை சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது உதவியாளர் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாக சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். பாஜக தலைவர்கள் இந்த கொலைக்கு திரிணமூல் காங்கிரஸே காரணம் என்று கூறி வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் திங்கள்கிழமை பாராசாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்கள் மூவரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களை ஏவிவிட்ட முக்கியக் குற்றவாளிகள் யார், கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்துத் தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.