புதுடெல்லி: மோசடி வழக்குகளில் கைதேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தன்னை ராகுல் காந்தியின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு பல நிதி மோசடிகளில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள பெரிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தனக்குத் தெரியும் என்று நம்பவைத்து, சிறையில் உள்ள சில தொழிலதிபர்களுக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களது குடும்பத்தினரிடம் சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு மோசடி செய்த பணத்தில் தனது காதலியான பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசுகளை சுகேஷ் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிதி மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கின் குற்றவாளி பட்டியலில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லி நீதிமன்றத்தில் ஜாக்குலின், தான் அப்ரூவராக மாற விரும்புவதாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்த விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்: நடிகை ஜாக்குலின், சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணியை முழுமையாக அறிந்தே, அவர் கொடுத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். இந்த வழக்கில் அவர் பாதிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், சுகேஷ் மோசடி செய்த பணத்தால் நடிகை ஜாக்குலினின் குடும்பத்தினரும் பயன் அடைந்துள்ளனர். எனவே, அவர் அப்ரூவராக மாறக் கோரும் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்று அமலாக்கத்துறை வலியுறுத்தியது.