தெலுங்கானா மாநிலத்தின் சித்தி பேட்டை மாவட்டம் ஹூஸ்னாபாத் நகரில், காக்கதீய மன்னர்கள் காலத்து எல்லம்மா ஏரியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி பாலம் தற்போது உருவாகி வருகிறது. இதுவே அம்மாநிலத்தின் முதல் கண்ணாடி பாலமாகும். இதன் கட்டுமானம் முடியும் தருவாயில் உள்ளது.
இந்த பாலம் 5 அடி அகலமும், 150 மீட்டர் உயரமும் கொண்டதாக, இதய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4.22 கோடி ரூபாய் செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இதன் பணிகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் முதல் கண்ணாடி பாலம் என்பதால், கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கு முன்பே, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இந்தப் பாலத்தை பார்வையிட வருவது வழக்கமாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே உள்ள ஏரியின் அழகியலோடு, இந்த நவீன கண்ணாடி பாலம் சேரும்போது, ஹூஸ்னாபாத் நகரின் அடையாளம் மேலும் மேம்படும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கும், சுற்றுலாவின் வளர்ச்சிக்கும் இது ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கும் என நம்பப்படுகிறது.