கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு சதித் திட்டமே காரணம் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவேன் என்ற நோக்கில்தான் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால், இன்று ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, யாரை துரோகி என்று விமர்சிதாரோ அவருடனேயே தற்போது கூட்டணி அமைத்துள்ளார். எனவே, டிடிவி தினகரன் கொஞ்ச காலம் அமைதியாக இருப்பது நல்லது' என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் கூட, திமுக இவ்வளவு பெரிய அழிவை சந்தித்ததில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படும். கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து பேசிய அவர், 'சதித் திட்டத்தின் மூலம்தான் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கரூர் நெரிசல் சம்பவம் நடந்தபோது, காவல் கண்காணிப்பாளருக்கே (SP) தெரியாத ஒரு விஷயம், செந்தில்பாலாஜிக்கு எப்படி தெரிந்தது?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3,085 ஏக்கர் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறிய குற்றச்சாட்டு குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். 'அந்த நிலங்கள் 1963 ஆம் ஆண்டே இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டவை. கடந்த 2-3 தலைமுறைகளாக சுமார் 10,000 குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். பட்டா மாறுதல் செய்யப்படாததால், சிலரால் அவை கோயில் நிலங்கள் என தற்போது கூறப்படுகின்றன. தற்போது அந்தப் பட்டாக்களை நாங்கள் முறைப்படுத்தியுள்ளோம். புதிதாக எந்தக் கோயில் நிலங்களையும் நாங்கள் யாருக்கும் கொடுக்கவில்லை. 10,000 குடும்பங்களை வெளியேற்றுவதற்கு இந்த அரசு தயாராக இல்லை. இதை நயினார் நாகேந்திரன் புரிந்துகொள்ள வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.
