சென்னை: வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மரணத்திற்குப் பிறகு இந்திய அரசின் அமைதிக்கான உயரிய விருதான அசோக் சக்ரா விருது பெற்றவரான மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என பெயர் சூட்ட வேண்டும்' என இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி, முதல்வர் விஜயை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
முதல்வர் விஜய் இந்த கோரிக்கையை பரிசீலித்து, அந்த சாலைக்கு தமிழில் 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என்றும், ஆங்கிலத்தில் 'MAJOR MUKUND VARADARAJAN SALAI' என்றும் பெயர் சூட்டுவதற்கான உத்தரவை நேற்று வெளியிட்டார். இந்த அறிவிப்பு ராணுவ வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேஜர் முகுந்த் வரதராஜன், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனந்தபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், ராணுவத்தில் பணியாற்றியபோது வீரமரணம் அடைந்தார். அவரது வீரதீர செயல்களுக்காக அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டதன் மூலம், அவரது தியாகம் வருங்கால தலைமுறையினருக்கும் நினைவூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற செயல்கள் ராணுவ வீரர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்றும் கருதப்படுகிறது.