ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆகியோருக்கு இடையே நடந்த இந்த ஆக்ரோஷமான சீண்டல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது.
சுப்மன் கில் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 84 ரன்கள் விளாசினார். இவரும் சாய் சுதர்சனும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து பிரம்மாண்ட அடித்தளம் அமைத்தனர். பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, சிராஜ் வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு மிரட்டலான தொடக்கத்தை கொடுத்தார். எந்தவித பயமும் இன்றி சிராஜ் பந்துவீச்சை எதிர்கொண்ட வைபவ், தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். வெறும் 16 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உட்பட 36 ரன்கள் குவித்து குஜராத் அணிக்கு பெரும் குடைச்சலை கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பல ஜாம்பவான்களுக்கு பந்துவீசிய சிராஜுக்கு இந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் 3வது ஓவரில் சிராஜ் தனது முதிர்ச்சியான அனுபவத்தை காட்டினார். வைபவ் சூர்யவன்ஷியின் பலவீனத்தை குறிவைத்து மிக நேர்த்தியாக ஒரு பவுன்சர் பந்தை வீசினார். அதை அதிரடியாக அடிக்க முயன்ற வைபவ், பந்தை சரியாக கணிக்கத் தவறி அர்ஷத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு 15 வயது சிறுவன் தனது பந்துவீச்சை துவம்சம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த சிராஜ், விக்கெட் கிடைத்தவுடன் ஆக்ரோஷத்தின் உச்சிக்கே சென்று மைதானத்திலேயே பயங்கரமாக கத்தி தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். சின்னப் பையனை வீழ்த்திவிட்டு அதை இப்படி கொண்டாட வேண்டுமா? என சில ரசிகர்கள் சிராஜ் கொண்டாட்டத்தை விமர்சித்தும் வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவர்களில் வைபவ் சூர்யவன்ஷி மிக அபாரமாக விளையாடி வருகிறார். இதுவரை பவர் பிளேவில் 148 பந்துகளை சந்தித்துள்ள அவர் 33 பவுண்டரி மற்றும் 32 சிக்சர்களுடன் 359 ரன்களை குவித்து எதிரணிகளை கதிகலங்க வைத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 242 ஆக உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் வைபவ் அவுட் ஆன பிறகு ராஜஸ்தான் அணியின் பேட்டிங் சீட்டுக்கட்டு போல சரிந்தது.
230 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி வெறும் 16.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு சுருண்டு சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. அனுபவ வீரரான சிராஜ், 15 வயது சிறுவனின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு இவ்வளவு ஆக்ரோஷம் காட்டியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.