2026 ஐபிஎல் சீசனில் பரபரப்பான ஆட்டம்! தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலிக்கும், பஞ்சாப் வீரர் ஹர்ப்ரீத் ப்ராரிற்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான மோதல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போலவே தனது அதிரடி ஆட்டத்தினால் பஞ்சாப் பந்துவீச்சாளர்களை திணறடித்தார் விராட் கோலி. 37 பந்துகளில் 58 ரன்கள் குவித்து, ஃபார்மில் இருந்த கோலி, மைதானத்தில் தனது வழக்கமான ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தின் போது, பஞ்சாப் வீரர் ஹர்ப்ரீத் ப்ரார் மற்றும் கோலி இடையே இருமுறை வார்த்தை மோதல் போன்ற சூழல் உருவானது. குறிப்பாக, 9-வது ஓவரில் கோலி ரன் அவுட் ஆக இருந்தபோது, ப்ரார் அவரை எதிர்கொண்ட விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆட்டத்தின் 9-வது ஓவரில், அஸ்மதுல்லா உமர்சாய் வீசிய பந்தை கோலி பாயிண்ட் திசையை நோக்கி தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஆனால், மறுமுனையில் இருந்த படிக்கல் ரன் எடுக்க மறுத்ததால் கோலி பாதியிலேயே நின்றுவிட்டார். அப்போது பந்தை எடுத்த ஹர்ப்ரீத் ப்ரார், ரன் அவுட் செய்ய முயன்றார். ஆனால் கோலி பதற்றமடையாமல், ப்ராரை நேருக்கு நேர் பார்த்து, 'முடியுமானால் விக்கெட்டை வீக்கு' என்பது போல சவாலான பார்வையுடன் நின்றார். அதற்கு ப்ராரும் பந்தை எறியாமல், கோலியை முறைத்துப் பார்த்தபடி அமைதியாக நின்றார். இந்த 'ஐஸ் கட்டி' போன்ற மௌனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பின்னர், ஆட்டத்தின் 14-வது ஓவர் முடிந்த பிறகு, கோலி சிரித்துக்கொண்டே ப்ரார் அருகே சென்று ஏதோ கிண்டலாகக் கூறினார். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல், ப்ரார் கோலியைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக தனது இடத்திற்குச் சென்றார். வழக்கமாக வீரர்களின் சீண்டல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கும் கோலிக்கு, ப்ராரின் இந்த அமைதியான எதிர்வினை ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. கடந்த சீசனிலும் இதேபோல் ஒரு நிகழ்வு இவர்கள் இருவருக்கும் இடையே நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை, ஜேக்கப் பெத்தேல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை அளித்த ப்ரார், கோலியின் கிண்டல்களைத் தனது மௌனத்தால் எதிர்கொண்டது ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.