ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஒரு கேப்டனாக ஒரு சீசனில் 500 ரன்களுக்கு மேல் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டேவிட் வார்னர், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் கில் இடம்பிடித்துள்ளார்.
நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 85 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 552 ரன்களை சேர்த்துள்ளார். அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் 12 இன்னிங்ஸ்களில் 554 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், கில் அவரை விட 3 ரன்கள் பின்தங்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
கேப்டனாக 500 ரன்களுக்கு மேல் குவிப்பது இது கில்லுக்கு இரண்டாவது முறையாகும். கடந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 650 ரன்களைக் குவித்த அவர், அந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த நான்காவது வீரராக திகழ்ந்தார். இந்த சாதனைப் பட்டியலில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் 2016 முதல் 2018 வரை முறையே 848, 641, 692 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், கே.எல். ராகுல் பஞ்சாப் அணிக்காக 2020 (670 ரன்கள்) மற்றும் 2021 (626 ரன்கள்) ஆண்டுகளிலும், லக்னோ அணிக்காக 2022 (616 ரன்கள்) ஆண்டிலும் ஒரு கேப்டனாக 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் 2010 (618 ரன்கள்), 2011 (553 ரன்கள்) ஆண்டுகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி 2015 (557 ரன்கள்), 2016 (973 ரன்கள்) ஆண்டுகளிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.