இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்து அணியை கட்டுப்படுத்தினர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சூரியன்ஷ் ஷெட்ஜ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகிய இரு இளம் வீரர்களை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தினார். முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்களை அடித்து அதிரடியாகத் தொடங்கியது. எனினும், இந்திய பந்துவீச்சாளர்களான ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களான டிம் டெக்டர் மற்றும் ராஸ் அடேர் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஹாரி டெக்டர் மற்றும் லோர்கன் டக்கர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. அப்போது, அறிமுக பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ், லோர்கன் டக்கரை வீழ்த்தி தனது முதல் சர்வதேச டி20 விக்கெட்டைப் பதிவு செய்தார். பின்னர் களமிறங்கிய பென் காலிட்ஸ், ஹாரி டெக்டருடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அயர்லாந்து அணியை மீட்டெடுத்த பென் காலிட்ஸ், ஷிவம் துபே பந்துவீச்சில் 30 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
அபாரமாக பந்துவீசிய ஷிவம் துபே, ஒரே ஓவரில் அயர்லாந்து அணிக்கு இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் காலிட்ஸை திலக் வர்மாவின் சிறந்த கேட்ச் மூலம் வெளியேற்றிய துபே, அடுத்த பந்திலேயே கரேத் டெலானியை போல்டாக்கி கோல்டன் டக் அவுட் செய்தார். இதன் மூலம் இந்திய அணி ஆட்டத்தின் மீது மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. பின்னர், ஜார்ஜ் டாக்ரெல் களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, அயர்லாந்து அணி 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் நடுவர்கள் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர். மைதானம் மூடப்பட்ட நிலையில், ஹாரி டெக்டர் 39 ரன்களுடனும், ஜார்ஜ் டாக்ரெல் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டம் மீண்டும் தொடங்கியதும், பிரின்ஸ் யாதவ் சிறப்பாக பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டையும் வீழ்த்தினார். இறுதியில், அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. பிரின்ஸ் யாதவ் தனது அறிமுகப் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.