மேகதாது அணை கட்டப்பட்டால் பெங்களூரு பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழவர் பேரணியக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார நடை பயணத்தை தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலுவில் அன்புமணி நேற்று தொடங்கினார். தொடர்ந்து ஒகேனக்கல், பென்னாகரம், தர்மபுரி டவுன் பகுதிகளில் பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கி, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆதரவு திரட்டினார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், "கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டினால், காவிரியில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. மேகதாது அணை கட்ட, மரங்களும் வன விலங்குகளும் அடர்ந்து இருக்கும் 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வளவு பெரிய அணையை கட்டினால், பெங்களூரு பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேகதாது அணை திட்டம், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் தமிழகத்திற்கும் எதிரானது" என்று அவர் கூறினார்.
மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கர்நாடக அரசு கடந்த 13 ஆண்டுகளில் ஒருமுறை கூட கடைப்பிடித்தது இல்லை என்றும், அம்மாநிலத்தில் வரும் 2028ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக, மேகதாது விவகாரத்தில் அரசியல் ரீதியாக மக்களை தூண்ட கர்நாடக அரசு முயல்கிறது என்றும் அன்புமணி குற்றம் சாட்டினார். எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக்கூடிய மேகதாது அணை திட்டத்திற்கு, லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.