ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஆற்றிய முதல் உரையே அவரது ஆட்சியின் முடிவுரையா என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினேன் என்ற ஆணவப் பேச்சு தேவையா? 'சிறுகதை' என்று கூறி 'உங்கள் அப்பா எங்கே' என்ற நக்கல் பேச்சு தேவையா? கை செய்கை மூலம் நையாண்டி தேவையா? இது முதல்வரின் உரையா? Reels-க்கான உரையா?' என அவர் சாடியுள்ளார்.
மேலும், முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்தி, "அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாத ஊதியம் 18,000 ரூபாய் எங்கே? அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மாதம் ஊதியம் 10,000 ரூபாய் எங்கே? காவல்துறை காவலர்களின் அடிப்படை ஊதியம் 25,000 ரூபாய் எங்கே?" என அப்பாவு கேள்வி எழுப்பினார்.
SC/ST மக்கள் தாட்கோ மூலம் வாங்கிய முழு கடனும் தள்ளுபடி எங்கே? மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் 20,000 ரூபாய் எங்கே? மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் 3600 லிட்டர் எங்கே? பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மாதம் 15,000 ரூபாய் எங்கே? அன்னபூரணி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் எங்கே? மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் எங்கே? பட்டதாரி இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை 4000 ரூபாய் எங்கே? முதல்வரே, உங்களுக்கு நினைவிருக்கிறதா? மக்கள் குரல் கேட்கிறதா?" என்று அவர் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.