சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்தார். “விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க விடுங்கள் என்று யாருக்கெல்லாம் போன் போட்டு சொன்னீர்கள்? அந்த பட்டியலை நான் வெளியிடட்டுமா? அப்போது மட்டும் பாஜக உங்களுக்கு இனிச்சிதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கவே தகுதியில்லாதவர் என்றும், இதுபோன்ற அரசியல் ஸ்டண்ட்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்தார்.
மேலும், முதலமைச்சர் சட்டமன்றத்தில் செய்கை காட்டுவதாகவும், இன்னும் திரைப்படத்தில் நடிப்பது போல் நினைத்துக்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். “முன்பு இதுபோன்று செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது நமக்கு தெரியும். முதல்வர் தனது தகுதி அறிந்து அதற்கான வரம்போடு சட்டமன்றத்தில் நடந்துகொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாத நிர்மல்குமார் எம்எல்ஏவாக இருக்க தகுதியற்றவர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக என்பது தவெக போன்ற சாதாரண கட்சி அல்ல என்றும், அடுத்த தேர்தலில் தவெக இருக்குமா என்பதே தெரியாது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
முந்தைய ஆட்சியில் மின்தடைக்கு அணில் காரணம் என்றும், தற்போது குரங்கு காரணம் என்றும் கூறுவதை அவர் சுட்டிக்காட்டி, இது போன்ற கருத்துக்களை விமர்சித்தார்.