அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் வரும் அக்டோபரில் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், ஹிமாச்சல் ஆகிய ஏழு மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.
வயது முதிர்வு காரணமாக, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தேர்தலை சந்திக்க கட்சியின் தேசிய நிர்வாகிகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க மேலிடம் விரும்பாததால், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோரில் ஒருவரை இடைக்கால தலைவராக நியமிக்க டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. இதில் அசோக் கெலாட்டுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் மாற்றப்பட உள்ளனர். மேலும், தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட வாய்ப்புள்ளது.
தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், பிரவின் சக்கரவர்த்தி மற்றும் முன்னாள் எம்பி செல்லகுமார் ஆகியோரில் ஒருவர் தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், 'மாநில தலைவர் பதவியில் தொடர வேண்டாம் என என் உள்மனம் சொல்வதால், ராஜினாமா குறித்து கார்கேவிடம் பேசினேன். என் கோரிக்கையை ஏற்று, தலைமை என்னை விடுவிக்கும் என நம்புகிறேன்' என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.