கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரித்து பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால், முதலமைச்சர் சட்டமன்றத்தில் கொண்டுவந்த இடைச்செருகல் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு அடுத்து பேசிய எதிர்கட்சித் தலைவர், ஏற்கனவே அளித்த திருத்தம் குறித்த கருத்தைத் தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், 'நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை' இணைக்கலாம் என தெரிவித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பொதுவாக தீர்மானங்களுக்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும் என்றும், வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றியது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும், திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது என்றும், இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க? யாரை வஞ்சிக்க? என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். எடப்பாடியின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.