சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது குறித்தும், அமைச்சர்கள் பதிலளிக்காதது குறித்தும் திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. முதலமைச்சர் விஜய் வெளியே வீராவேசமாக பேசினாலும், பேரவையில் பதுங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வீரவசனமாக பேசி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள், பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பியபோதும், சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் பதிலளிக்கவில்லை என்றும், இது குறித்து முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்காமல் அமைதியாக அமர்ந்திருப்பது ஏன் என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
‘பதில் தெரியாதவன் கிட்ட கேள்வி கேட்டா, தேடிப்பிடித்து தப்பாவாவது பதில் சொல்லுவான், எனக்கு கேள்வியே தெரியாதே’ என்ற கமல்ஹாசனின் வசனத்தை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் விஜய் ஒரு ‘DUMMY CM’ என மக்களுக்குத் தெரியக்கூடாது என்ற பயத்தில் நேரலையை நிறுத்தியதாகவும், மக்களின் முன் அம்பலப்பட்டு நிற்பதாகவும் திமுக விமர்சித்துள்ளது.