‘ஜமா’ படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறியப்பட்ட பாரி இளவழகன், தற்போது ‘அன்பே டயானா’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ஏழாவது படைப்பாக உருவாக்கியுள்ளது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட நடிகை ரம்யா ரங்கநாதன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் திரையுலகில் நடிப்பில் கவனம் செலுத்துவது படத்தின் சிறப்பம்சமாகும். இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்தப் படம், சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்டு குடும்பத்துடன் கண்டு மகிழும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டிருந்தார்.
‘அன்பே டயானா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படக்குழு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.