17வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழக வெற்றிக் கழக அரசின் இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேகர் தனது உரையை வாசித்தார். தனது உரையில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா ஆகியோரின் பெயர்களை ஆளுநர் குறிப்பிட்டு பேசியதுடன், எம்.ஜி.ஆர் 1977ல் நிகழ்த்திய புரட்சியைப் போல 2026ல் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 74 ஆண்டுகால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் அர்லேகர் தனது உரையில் குறிப்பிட்டார்.
திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்குள் வரும்போது கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். 'வாயை திறங்க CM' என்ற வாசகம் இடம்பெற்றிருந்த பேட்ஜ்கள் மூலம் தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்ட முயன்றனர். கடந்த திமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதல் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளதால், அவருக்கு 5வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், மக்களின் பெரும் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளதாக ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளதாகவும், சட்டமன்றத்தில் மக்களுக்காக விவாதிப்பீர்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார். விசில் புரட்சியின் மூலம் புதிய வரலாறு படைத்துள்ள தவெக அரசு, பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளதாகவும், மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும் என்றும் ஆளுநர் அர்லேகர் உரையில் தெரிவித்தார்.
'தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்' என சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளதாகவும், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.